17 April 2010 ·


உங்கள் வீட்டில் ஒரேயொரு குழந்தையா..?

'ஷாக் சர்வே'யும்... 'சந்தோஷ டிப்ஸ்'களும்!

‘ஒரேயரு குழந்தை அல்லது குழந்தையே இல்லாத பெற்றோரை நோய்கள் அதிகமாக தாக்குகின்றன...'

- இது, உலகம் முழுக்க சுமார் 15 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டு, அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி ஒன்றின் முடிவு. இந்த ஆய்வை லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவ அமைப்பு (லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் டிராபிகல் மெடிசின்) நடத்தியுள்ளது.

'அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், நோய்கள் வராதா...?' என்று கேட்டால்...

''இரு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். தாய் மற்றும் தந்தைக்கு புற்றுநோய், இதய நோய் பாதிப்பு குறைவாக இருக்கிறது. மேலும், இந்த பெற்றோர்களிடம் மதுப் பழக்கமும் குறைவாக இருக்கிறது' என்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு



கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக... குறிப்பாக, பத்துப் பதினைந்து ஆண்டுகளில் பெரும்பாலானவர்கள், ‘நாம் இருவர்... நமக்கு இருவர்’ என்ற நிலையிலிருந்து மாறி ‘நாம் இருவர்... நமக்கு ஒருவர்’ என்ற நிலைக்கு வந்துவிட்டனர். அதுமட்டுமல்ல... குழந்தையில்லாத தம்பதி களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், இந்த ஆய்வு முடிவுகள் பயமுறுத்துவதாக இருக்கவே... சென்னையைச் சேர்ந்த பிரபல 'குழந்தைகள் நல மருத்துவர்' ஜெயந்தினியிடம் அதைப் பற்றிக் கேட்டோம்

"இதில், பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். இரு குழந்தைகள் என்கிறபோது நிறைய ப்ளஸ் பாயின்ட்டுகள் இருக்கின்றன. இருவருமே அவர்களுக்குள் விளையாடிக் கொள்வார்கள்; சண்டை போட்டுக் கொள்வார் கள்; பிறகு, சமாதானமாகி விடுவார்கள். பெற்றோர்களை எந்த விஷயத்துக்கும் அதிகம் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள். ஏதாவது பிரச்னை என்றால், ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வார்கள். பெற்றோரும் வெளியே செல்வதாக இருந்தால், இரு குழந்தைகள் என்றால் தாராளமாக வீட்டில் விட்டுவிட்டு நிம்மதியாகச் செல்வார்கள். இதுபோன்ற காரணங்களால், அந்தப் பெற்றோருக்கு மன நிம்மதி கிடைப்பதால், அவர்களை நோய்கள் அதிகம் தாக்காமல் இருக்கலாம். அதற்காக ஒரு குழந்தை உள்ளவர்களை எல்லாம் நோய் தாக்கும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மனநிம்மதி இருந்தாலே... நோய்களை வென்று விட முடியும்.

ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர், 'தவறு செய்துவிட்டோமே' என்று எண்ணத் தேவையில்லை. பல்வேறு காரணங்களுக்காக ஒரு குழந்தையோடு நிறுத்தி இருப்பீர்கள். ஒரு குழந்தைக்கு மேல் சிலருக்கு பிறக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். 'பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்க நிறைய பணத்துக்கு எங்கே போவது?' என்று பொருளாதார ரீதியாக சிந்தித்து ஒரு குழந்தையோடு பலர் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். அந்தக் காரணத்தை நினைத்து மனதில் நிம்மதியை ஏற்படுத்திக் கொண்டாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டிய டாக்டர், ஒற்றைக் குழந்தை விஷயத்தில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசினார்...

''ஒரு குழந்தை என்கிறபோது அது தனியாக வளர்வதால் மற்றவர்களோடு அனுசரித்து செல்லும் போக்கு அவ்வளவாக இருப்பதில்லை. இதேபோல் விட்டுக் கொடுத்து செல்லும் போக்கும் இருப்பதில்லை. ஒரு கஷ்டம் என்று வந்தாலும், அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

ஒரேயரு பெண் குழந்தை என்றால், கல்யாணமாகி வேறு இடத்துக்கு சென்றபிறகு, உடன் பிறந்த ஆதரவு இல்லை என்பது பாதிப்பான விஷயம்தான். பெற்றோருக்கு வயதாகி இருக்கும் நிலையில். ஏதாவது, உடல் நலக் குறைவு, கஷ்டம் என்று பெற்றோர் வீட்டுக்கு வரும் போதும் அவதிப்பட வேண்டியிருக்கும். அவர்களே வயோதிகத்தில் இருக்கும்போது, பிள்ளையைக் கவனிக்க நினைத்தால்கூட முடியாது. அப்போதுதான், 'ம்... கூடப்பிறந்தவங்க யாராச்சும் இருந்திருந்தா... அவங்க வீட்டுல போய் படுத்து ரெஸ்ட் எடுத்திருக்க முடியும்’ என்று தோன்றும்'' என்றவர், ஒற்றைக் குழந்தை அல்லது குழந்தை இல்லாத நிலை என்ற சூழலில் இருப்பவர்கள், இதுமாதிரியான கஷ்டத்திலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.

"ஒரு குழந்தை வைத்திருப்பவர்கள், தங்களின் பிள்ளையை அக்கா - தங்கை, அண்ணன்- தம்பி உறவு முறை கொண்டவர்களுடன் பாசமாக பழக வைப்பது நல்லது. அவர்களின் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். அவர்களை தொலைபேசியில் அடிக்கடி பேசச் சொல்லுங்கள். பிறந்தநாள், தேர்வு, விளை யாட்டு, போட்டி போன்றவற்றில் உறவினர் பிள்ளைகள் வெற்றி பெறும்போது உங்கள் பிள்ளைகளை பாராட்டச் சொல்லுங்கள். பரிசு கொடுக்க பழக்குங்கள். மேலும், நான்கு பேருக்கு நல்லது செய்யும்படி பிள்ளையை வளர்த் தாலே அவர்களுக்கு நிறைய நல்ல ஆதரவுகள் கிடைத்துவிடும். பெற்றோரும் நிம்மதியாக நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். அதேபோல குழந்தை இல்லாதவர்களும் உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் இதேபோல தொடர்பில் இருக்கும்போது, அவர்களுக்கான நிம்மதியும் கிடைத்து விடும்’’ என்றார் ஜெயந்தினி.

சர்வே முடிவு 'ஷாக்' அடித்தாலும், நாம் நினைத்தால் 'சந்தோஷ'மாக்கிக் கொள்ள முடியும் என்பதே உண்மை!

சர்வே சொல்லும் சில உண்மைகள்...

அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தின் தந்தை, பெரும்பாலும் வன்முறையாளராக இருக்கிறார்.

நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்க்கு கர்ப்பபை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதேசமயம், மார்பகப் புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருக்கிறது.

அதிக குழந்தைகளை பெற்ற பெண்களுக்கு இதய நோய் மற்றும் ரத்த ஓட்டப் பிரச்னைகளும், ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளும் இருக்கின்றன.

தனியாக வளரும் குழந்தைகளுக்கு நான்கு வயதுக்கு மேல் மன அழுத்தம், மூட் அவுட் மற்றும் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கின்றன.

மூன்று குழந்தைகள் இருந்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

அதிக குழந்தைகள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் & சிறுமிகள் ஊக்கத்தோடு காணப்படுகிறார்கள்.

மூன்று, நான்கு குழந்தைகள் உள்ள பெற்றோர்களுடன் ஒப்பிடும்போது, இரு குழந்தைகளை கொண்ட பெற்றோர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.



நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites