பெங்களூர் கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர்!
பெங்களூர் : இமாச்சலப் பிரதேசத்தின் குக்கிராமத்தில் சீடர்களுடன் பதுங்கியிருந்த நித்யானந்தா நேற்று கைது செய்யப்பட்டு சிம்லா சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூர் கோர்ட்டில் அவர் இன்று மாலை ஆஜர்படுத்தப்படுகிறார். கோர்ட் அனுமதியுடன் அவரை காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடக, தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர் அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் ‘நித்யானந்த தியான பீடம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் கடந்த மாதம் 2&ம் தேதி வெளியாயின. அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த பக்தர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிடதி தலைமை ஆசிரமம், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இருந்த ஆசிரம கிளைகளை பக்தர்கள் சூறையாடினர். அவரை கைது செய்ய வலியுறுத்தி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பரபரப்பான சூழ்நிலையில், நித்யானந்தா தலைமறைவானார். இமயமலைப் பகுதியில் அவர் பதுங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையில், ஒரு வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்த கர்நாடக சிஐடி போலீசுக்கு ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர். பிடதி ஆசிரமத்தில் ஒரு இடம் விடாமல் தேடி முக்கிய ஆவணங்கள், டைரிகளை கைப்பற்றினர். இதில் இருக்கும் செல்போன் எண்களைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். எந்த எண்களை தற்போது எந்தெந்த இடங்களில் இருந்து பயன்படுத்துகின்றனர் என்று கண்காணித்தனர்.
இமாச்சலப் பிரதேசம் சோலன் மாவட்டத்தில் ஒரு செல்போன் இருப்பதை கண்டுபிடித்தனர். மாநில போலீஸ் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். மாம்லிக் என்ற குக்கிராமத்தில் சீடர்களுடன் பதுங்கியிருந்த நித்யானந்தாவை நேற்று கைது செய்தனர். அவரும் 4 சீடர்களும் பலத்த பாதுகாப்புடன் சிம்லாவுக்கு கொண்டு வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு விமானத்தில் நித்யானந்தாவை கர்நாடக போலீசார் பெங்களூர் கொண்டு வருகின்றனர். அவரை இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.
பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், மோசடி, மதஉணர்வை புண்படுத்துதல், கடத்தல் உள்ளிட்ட புகார்களின் கீழ் நித்யானந்தா மீது வழக்குகள் உள்ளதால் கோர்ட் அனுமதி பெற்று அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர். மருத்துவப் பரிசோதனையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஆதாரங்களை நித்யானந்தாவின் மாஜி சீடர் தர்மானந்தா (எ) லெனின் கருப்பன்தான் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கொடுத்தார். பல பெண்களை நித்யானந்தா பலாத்காரம் செய்துள்ளதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நித்யானந்தா மீதான மோசடி புகார்களை வக்கீல் அங்கயற்கண்ணி கொடுத்துள்ளார். பலரை ஏமாற்றி நித்யானந்தா பல கோடி ரூபாய் சுருட்டியதாக புகாரில் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 420&வது பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ‘பெங்களூர் கொண்டுவரப்பட்ட பிறகு நித்யானந்தாவிடம் இதுபற்றி விசாரிக்கப்படும். உரிய ஆதாரங்கள் கிடைத்தால் அவரை கைது செய்து சென்னைக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிடதி ஆசிரமம் மூலம் உலகப்புகழ் பெற்றிருந்த நித்யானந்தா, படுக்கை அறை காட்சிகள் வெளியான பிறகு இப்போது கைதியாக பெங்களூர் வருகிறார். இதையடுத்து, கோர்ட் மற்றும் பெங்களூரில் நித்யானந்தா கொண்டு வரப்படும் வழி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரம பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment