திருமண மண்டபத்தின் படிக்கட்டுகளில் கால்வைத்த மறு வருடமே நீதிமன்றங்களின் படிக்கட்டுகளை மிதிக்கும்
நட்சத்திர ஜோடிகளின் மத்தியில் எந்த சிறு பிரிவும் இல்லாமல் இன்றும் காதலுடன் இணைந்து சந்தோஷமாக வாழும் அபூர்வ தம்பதி என தேவயானி & ராஜகுமாரன் ஜோடியை சொல்லலாம். திருமணத்துக்கு பின், ராஜகுமாரன் இயக்குனராக பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. ஆனால், தேவயானி பெரிய திரையிலும், சின்னத் திரையிலும் சிகரத்தை அடைந்திருக்கிறார். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இவர்களது காதலும், அன்பும், பரிவும் குறையவேயில்லை. அவர்களுக்கு சொந்தமான 'இனியா ரிக்கார்டிங் ஸ்டூடியோ’வில் டூயட் பேட்டிக்காக இருவரும் உரையாடிய தருணத்திலும் இருவரது பார்வையிலும் உச்சரிப்பிலும் வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லிலும் அன்பும், காதலும் வழிந்ததை உணர முடிந்தது. ஸ்டூடியோவின் அறையில் தேவயானிக்காக காத்திருந்த ராஜகுமாரன், அவர் வந்ததும் மரியாதையாக எழுந்து நின்றார்.
ராஜகுமாரன்: வாங்கம்மா... இப்படி உட்காருங்க...
தேவயானி: ரிக்கார்டிங் ஸ்டூடியோ எப்படி போயிட்டிருக்கு?
ராஜகுமாரன்: நம்ம படத்தோட வேலை நடந்துட்டிருக்கு. அடுத்து நீங்க ஒரு சீரியலை ஆரம்பிச்சீங்கன்னா அந்த வேலையையும் ஆரம்பிச்சிடலாம். நிறைய புது பசங்க நல்ல குறும்படங்கள் கொண்டு வர்றாங்க. அந்த வேலைகளும் நடக்குது.
தேவயானி: என்னமோ நான் முதலாளியம்மா மாதிரியே பேசறீங்களே?
ராஜகுமாரன்: சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க முதலாளியம்மாதான்.
தேவயானி: இருந்தாலும் இந்த இடத்தை வாங்கிக் கொடுத்தது... பில்டிங் கட்டினது... எல்லாமே நீங்கதானே?
ராஜகுமாரன்: அதுக்கு காரணம் நீங்கதான். அப்ப நீங்க கர்ப்பமா இருந்தீங்க. அந்த சூழ்நிலைலயும் நம்மால மத்தவங்க பாதிக்கப்படக் கூடாதுன்னு சீரியல், சினிமால தொடர்ந்து நடிச்சுட்டு இருந்தீங்க. அதனால உங்களுக்கு வசதியா இருக்கட்டுமேன்னு ஒரு கேரவன் வாங்கினேன். அத நிறுத்த ஒரு இடம் தேவைப்பட்டது. இந்த இடம், நம்ம பட்ஜெட்டுக்கு சரி வந்தது. வாங்கினேன். இப்ப நம்ம பொண்ணு பேர்லேயே ஸ்டூடியோவாயிடுச்சு.
தேவயானி: அதுசரி ‘திருமதி.தமிழ்’ படத்தை எப்போ முடிக்கப் போறீங்க? ஒரு புரட்யூசரா கேக்குறேன்.
ராஜகுமாரன்: இதுக்கு ஒரு டைரக்டரா பதில் சொன்னா ‘சீக்கிரம் முடிச்சுடறேம்மா’னு சொல்லுவேன். அதுவே, ஒரு கணவனா சொல்லணும்னா ‘நம்ம படம்தானேம்மா, யாருகிட்டயும் கடன் வாங்கிப் பண்ணலையே. நமக்கு எப்போ முடியுதோ அப்போ முடிச்சிருவோம்’னு சொல்லுவேன். சரி அடுத்து உங்க சீரியல் எப்போ?
தேவயானி: ‘கோலங்கள்’னு ஒரு பெரிய ஹிட் கொடுத்தாச்சு. ஸோ, அடுத்து இதைவிட வெயிட்டா பண்ணணும். ஆனா, வர்ற வாய்ப்பு எல்லாம் ‘கோலங்கள்’ மாதிரியே இருக்கு. அதான் நல்ல கதைக்காக காத்துட்டிருக்கேன்.
ராஜகுமாரன்: அதுவரைக்கும் சினிமால நடிக்கலாமே?
தேவயானி: சினிமாவும் அப்படித்தான். ‘நான் ஹீரோயினா நடிப்பேன்’னு அடம் பிடிக்கல ஆனா, நடிக்கிற கேரக்டர் படத்துக்கு பெரிய பலமா இருக்கணும்னு விரும்பறேன். சும்மா ஹீரோவுக்கு அக்கா, அண்ணின்னு வந்து கண்ணக் கசக்கிட்டு போற மாதிரி இருக்கக்கூடாது
இல்லையா? மலையாளத்துல அருமையான கேரக்டர்களா வருது. அங்க
ஹீரோயினாவும் நடிக்கிறேன். தமிழ்ல போனா போகுதுன்னு உங்க படத்துல நடிச்சிக் கொடுத்தேன்!
ராஜகுமாரன்: அதுக்கு வேணும்னா படத்து பட்ஜெட்டுல உங்க சம்பளத்தையும் சேர்த்துக்குங்க. சரி, ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன். நமக்கு ஒரு ஆண் குழந்தை இல்லையேன்னு எப்பவாவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா?
தேவயானி: இல்லவே இல்லை. உங்களுக்கே தெரியும் முதல் தடவை கர்ப்பமானப்பவும் சரி, ரெண்டாவது முறை கர்ப்பமானப்பவும் சரி, பெண் குழந்தைதான் வேணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். ஏன்னா, எனக்கு பெண் குழந்தைங்கனா ரொம்ப இஷ்டம். அக்கா தங்கச்சினு எனக்கு யாரும் கிடையாது. இதுவும் ஒருவேளை காரணமா இருக்கலாம். அதோட பெண் குழந்தைங்கதான் பின்னாடி வளர்ந்த பிறகு நம்ம மேல ரொம்பப் பிரியமா இருப்பாங்க. சரி, ஒரு அப்பாவா நம்ம குழந்தைங்க என்னவாகணும்னு விரும்புறீங்க?
ராஜகுமாரன்: அத அவங்களே வளர்ந்த பிறகு தீர்மானிக்கட்டுமேமா... இப்ப அவங்க குழந்தைங்களாகவே இருக்கட்டும்...
தேவயானி: ரொம்ப சரியா சொன்னீங்க. எனக்கும் ரொம்ப நாளா உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு ஆசை. நீங்க ஏன் ‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்...’ பிறகு படமே பண்ணல?
ராஜகுமாரன்: சினிமான்னு இறங்கிட்டா அதுலயே முழுமையா இருக்கணும். ஆபீசுலயே வேலை பாத்து அங்கயே தூங்கி, காலை சாப்பாட்டுக்கு மட்டும் வீட்டுக்கு வந்து... எந்நேரமும் சினிமா பத்தியே யோசிச்சு... இப்படி இருக்கறவங்களாலதான் சினிமால ஜெயிக்க முடியும்னு நினைக்கறேன். அதுக்கான வாய்ப்பு இப்ப எனக்கில்ல. மனைவி, குழந்தைங்க, குடும்ப நிர்வாகம் இதுதான் எனக்கு இப்ப முக்கியம். ஒரு கணவனா, தந்தையா என்னோட கடமைகள சரியா செய்துட்டு இருக்கேன். நிம்மதியாவும் இருக்கேன்.
தேவயானி: எனக்கென்னவோ உங்கள நான் கட்டிக்கிட்டதால உங்க சினிமா லைஃப் பாழாயிடுச்சோன்னு தோணுது...
ராஜகுமாரன்: (அதிர்ச்சியுடன்) என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? சத்தியமா அப்படி இல்லவே இல்ல. எனக்குள்ள எப்பவும் ஒரு நல்ல இயக்குனர் வாழ்ந்துகிட்டுதான் இருக்கான். வெற்றிகரமான இயக்குநரா நிச்சயம் நான் பேர் வாங்குவேன். உங்களுக்கும், நம்ம குழந்தைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செஞ்சுட்டு
சினிமாவுல சாதிச்சுக் காட்டுவேன். நான் சாதாரண இயக்குனர்... நீங்க பெரிய நடிகை... நீங்க நினைச்சிருந்தா...?
தேவயானி: (இடைமறித்து) நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு தெரியும். இப்பவும் சொல்றேன். உங்களை மாதிரி அன்பான புருஷன், என் மேலயும், என் குழந்தைங்க மேலயும் உயிரையே வச்சிருக்குற மனுஷனை கணவனா அடைய நான் கொடுத்து வைச்சிருக்கணும். இதுக்காக அந்த கடவுளுக்கு நான் தினமும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன். ரியலி யூ ஆர் மை லவ்லி ஹஸ்பெண்ட். அதனாலதான் உங்கள ‘அன்னு’னு செல்லமா கூப்பிடுறேன். ‘அன்னு’ன்னா எங்க கொங்கணி பாஷைல ‘செல்லம்’னு அர்த்தம்.
ராஜகுமாரன்: (நெகிழ்ச்சியுடன்) இத்தனை வருஷங்களா நீங்க உழைச்சுட்டு இருக்கீங்க. நான் பெரிய டைரக்டராகி நிறைய சம்பாதிச்சதும் வேலைக்கு போகாம இருப்பீங்களா?
தேவயானி: நிச்சயமா மாட்டேன். எனக்கு என் வேலை முக்கியம். நீங்க எத்தனை கோடி சம்பாதிச்சாலும் நான் நடிச்சுகிட்டுதான் இருப்பேன். நீங்க உங்க வேலைய பாருங்க, நான் என் வேலைய பாக்குறேன். உங்க வளர்ச்சிய நான் ரசிச்சுக்கிட்டே இருப்பேன்.
(இப்படி இருவரும் அன்பும் நெகிழ்ச்சியுமாக உரையாடும்போது, ‘‘தேவயானி விரல் அசைவுக்கு ராஜகுமாரன் கட்டுப்படுவார்’னு வெளியில பேசிக்கிறாங்களே...’’ என்று ஒரு பிட்டை போட்டோம். அவ்வளவுதான் இருவரும் பொங்கிவிட்டார்கள்.)
தேவயானி: யார் என்ன சொன்னாலும் அதைப் பத்தி கவலையில்ல. எங்களுக்குள்ள இருக்கிற அன்பு எங்களுக்கு மட்டுந்தான் தெரியும்.
ராஜகுமாரன்: நான் சத்ரியகுல வன்னியர் வம்சத்தை சேர்ந்தவன். யாருடைய விரல் அசைவுக்கும் நான் கட்டுப்பட மாட்டேன். என்னோட விரல் அசைவுக்குத்தான் தேவயானி கட்டுப்படுவார். ஏன்னா, என் விரல் அசைவுல அன்பும், அக்கறையும், காதலும்தான் இருக்கு!
உங்கள நான் கட்டிக்கிட்டதால உங்க சினிமா லைஃப் பாழாகிடுச்சா?
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment