மாவோயிஸ்ட் பிரச்னையைத் தீர்க்க கலாம் யோசனை!
பழங்குடி மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதிகளில் நிலச் சீர்திருத்தத்தை கொண்டுவருவது, புரா (PURA) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் மாவோயிஸ்ட் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் யோசனைத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய அப்துல் கலாமிடம், மாவோயிஸ்டுகளால் 76 போலீஸார் கொல்லப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, 'இத்தகைய அச்சுறுத்தல்களால் சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் வெளிநாட்டினர், குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் தொழில் முதலீடு செய்ய தயங்குகின்றனர். இதற்குத் தீர்வு தான் என்ன?' என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்துப் பேசிய கலாம், "மாவோயிஸ்ட் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
முதலவதாக, பழங்குடியினர் மிகுதியாகவுள்ள வளர்ச்சி அடையாத பகுதிகளில் நிலச் சீர்த்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எங்கேல்லாம் நிலச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லையொ, அங்கெல்லாம் இத்தகைய கிளர்ச்சிகள் பெரும்பாலான இடங்களிலும் ஏற்படுகின்றன.
எனவே, சிலச் சீர்த்திருத்தம் இல்லாதப் பகுதிகளில் எல்லாம், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, புரா (PURA) திட்டம். கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் 'புரா' (PURA Providing Urban Amenities in Rural Areas).
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களிலேயே நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வசதிகளை செய்து கொடுக்க நான்கு விதமான இணைப்புகள் அவசியம். முதல் இணைப்பு சாலை போக்குவரத்து. இரண்டாவது தகவல் தொடர்பு இணைப்பு. மூன்றாவது அறிவுசார்ந்த இணைப்பு. இந்த மூன்றையும் சேர்த்தால்தான் நான்காவதாக பொருளாதார இணைப்பு உருவாகும். அருகில் உள்ள கிராமங்களை இணைத்து புரா குழுமம் அமைய வேண்டும். பிறகு, புரா திட்டத்தின் முதல் இணைப்பாக அக்கிராமங்களுக்கு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும்.
இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள், எலக்ட்ரானிக் தொடர்புகள், மின்னணு தொலைபேசி வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு சுற்றிலும் உள்ள எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். புரா அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றி கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். இதன் வழியாக சிறுதொழில்கள் பெருகி குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இதுவரை ஏறக்குறைய 7,000 புரா குழுமங்கள் உருவாகியிருக்கின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கும் 64 கிராமங்கள் இணைக்கப்பட்டு பொருளாதார ஏற்றம் கண்டிருக்கிறது.
எங்கெல்லாம் மக்களிடம் வருவாய் ஈட்டும் திறன் மிகுதியாக இருக்கிறதோ, அங்கெல்லாம் கிளர்ச்சிகள் வெகுவாக குறைந்துவிடுகின்றன. எனவே, பாதிப்பு மிகுந்துள்ள ஏழ்மையால் உழலும் மக்கள் வாழும் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காணலாம்," என மாவோயிஸ்ட் பிரச்னைகள் மிகுந்துள்ள பகுதிகளில் புரா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கலாம் யோசனை தெரிவித்தார்.
0 comments:
Post a Comment