மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களான நடிகர் ஷாருக்கான், நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரின் அலுவலகங்களில் வருமானத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்சிங், வரி ஏய்ப்பு, கறுப்பு பணம் முதலீடு, அணி ஏலத்தில் மோசடி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. இது பற்றி வருமான வரி துறையினர் நடத்தி வரும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, சண்டிகர் நகரங்களில் நேற்று அதிரடி சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் அலுவலகங்கள் மற்றும் டி.வி. ஒளிபரப்பில் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. கொல்கத்தாவில், நைட் ரைடர்ஸ் அணியின் அலுவலகம் அமைந்துள்ள மேற்கு வங்க கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் சோதனை நடந்தது. அந்த அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானின் மும்பை அலுவலகத்திலும் அதிகாரிகள் குழு ரெய்டு செய்தது. பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு சொந்தமான பஞ்சாப் கிங்ஸ் அணியின் சண்டிகர் அலுவலகத்தில் நடந்த சோதனையில், கணக்கு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பான டி.வி. ஒளிபரப்பு உரிமையை ஏலம்விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக,மும்பையில் உள்ள சோனி டி.வி.க்கு சொந்தமான மல்ட்டி ஸ்கீரின் மீடியா, உட்பட 3 நிறுவனங்களின் அலுவலகங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை போட்டனர்.
0 comments:
Post a Comment