ராமர் பாலம் அமைந்த பகுதியை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

22 April 2010 ·

ராமர் பாலம் அமைந்த பகுதியை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

ராமர் பாலம் அமைந்த பகுதியை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்குமாறு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.

சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு வரும் பகுதியான, ஆறாவது வழித் தடத்தில் ராமர் பாலம் உள்ளதால், மாற்றுப் பாதையில் அந்த திட்டத்தை அமல்படுத்துமாறு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளும் அது தொடர்பாக மனு தாக்கல் செய்தன.

இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக பச்சோரி தலைமையிலான குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. கடலியல் ஆய்வு, சுற்றுச் சூழல், பூகம்ப அபாயம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்த பிறகு அறிக்கை தாக்கல் செய்வதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவித்து, பாலம் அமைந்துள்ள பகுதியில் சேது கால்வாய் திட்டம் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்சு விசாரணை நடத்தியது.

அப்போது ஆஜரான சுப்பிரமணிய சாமி, `சேது கால்வாய் திட்டத்தை அறிவிக்கும் முன்பாக, போதிய ஆய்வுகள் நடத்தப்படவில்லை. பச்சோரி குழு அறிக்கை அளிக்கும் வரை சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார். அதே நேரத்தில், மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் ஹரியன் ராவத், `பச்சோரி குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஓராண்டு கால அவகாசம் தேவை' என்றார்.

இதையடுத்து, ராமர் பாலம் அமைந்த பகுதியை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு தெரிவித்தது. மேலும், பச்சோரி குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது தீர்ப்பு அளிக்கும் வரை சேது கால்வாய் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் உத்தரவிட்டது.

அதே நேரத்தில், 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பச்சோரி குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு வழக்கை ஒத்தி வைப்பதாகவும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

இதற்கிடையே, வருகிற மே மாதத்துடன் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெறுகிறார். அதற்கு பிறகு, இந்த வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் முதன்மை அமர்வு பெஞ்சு, முதலில் இருந்து விசாரணையை தொடங்காமல், தற்போது விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் என்றும் கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites