பாதி விலைக்கு கிடைக்கிறது

19 April 2010 ·




புதுடெல்லி : பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கிகளை குறைந்த விலைக்கு 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் வாங்கியது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிய வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நம்நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட துப்பாக்கிகள், ஆயுதங்களை சுங்கத் துறை, போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். அரசு அதிகாரிகள் அல்லது மத்திய நிதி அமைச்சகத்தால் ஒப்புதல் தரப்பட்ட ஊழியர்கள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதுண்டு. அதற்காக சர்வதேச விலையைவிட குறைவாக விற்பனை செய்யப்படும்.
அதுபோன்ற பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கிய எம்.பி.க்கள், அரசியல்வாதிகள் பற்றிய விவரங்களைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் வர்மா விண்ணப்பித்தார். அவருக்கு முழு விவரமும் அளிக்கப்பட்டது.
அதன்படி, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், வெளியுறவு பெண் இணை அமைச்சரான பிரனீத் கவுர், காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி, பா.ஜ. முன்னாள் எம்.பி. வினோத் கன்னா ஆகியோர் உட்பட 103 அரசியல்வாதிகள் துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர்.
சர்வதேச விலையைவிட குறைந்த விலைக்கு துப்பாக்கி கிடைப்பதால், அவற்றை வாங்க அரசியல்வாதிகளிடம் ஆர்வம் அதிகம். பறிமுதலான வெளிநாட்டு துப்பாக்கிகளை வாங்க விண்ணப்பித்த பல தலைவர்கள், காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். எனவே, முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆயுதங்களை நிதி அமைச்சகம் விற்கிறது.
பெண் அமைச்சரான பிரனீத் கவுர் .357 மேக்னம் ரக துப்பாக்கியை ரூ.34,065க்கு வாங்கினார். அதன் சர்வதேச சந்தை விலை ரூ.56,700. அதே ரக துப்பாக்கியை வினோத் கன்னா ரூ.23,000க்கு வாங்கினார். கும்கும் ராய் என்பவர் ரூ.1.36 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கியை ரூ.58,000க்கு வாங்கியுள்ளார்.
ரூ.1.3 லட்சம் விலையுள்ள 7.65 மி.மீ. பிஸ்டலை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வாங்கினார். ஜனார்தன் திவேதி .32 போர் ரக ரிவால்வரை ரூ.1.45 லட்சத்துக்கும், சமாஜ்வாடி முன்னாள் எம்.பி. அபு ஆஸ்மி ரூ.3 லட்சத்துக்கு துப்பாக்கியையும் வாங்கியுள்ளனர். பறிமுதலான ஆயுதங்களை வாங்கிய 103 அரசியல்வாதிகளில் பிரனீத் கவுர் உட்பட 5 பேர் மட்டுமே பெண்கள்.
குற்றப் பின்னணி உள்ளதாக கூறப்படும் சில எம்.பி.க்களும் அரசின் இந்த விற்பனைக் கொள்கையை சாதகமாக பயன்படுத்தி ஆயுதங்களை வாங்கியுள்ளனர். எனினும், இதற்கு முன் எந்த ஆயுதமும் தங்களிடம் இல்லை என்ற எழுத்துப்பூர்வ உறுதி அளித்த பிறகே துப்பாக்கி விற்பனை செய்வதாக அரசு தெரிவிக்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள இந்த விளக்கத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ், இந்திய தேசிய லோக் தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி வாங்கியுள்ளனர்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites