ஐ.பி.எல். விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் உறுதி அளித்தார்.
நாடு முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளில் கறுப்பு பணம் புழங்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை நேற்று எதிரொலித்தது. பா.ஜனதா, இடதுசாரிகள், சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் என கட்சி பேதமின்றி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும், `ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்க வேண்டும்` என வலியுறுத்தினர்.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் விவாதத்துக்கு பிறகு மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பதிலளித்து பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டிகளில் முதலீடு செய்ததில் தவறு கண்டு பிடிக்கப்பட்டால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விசாரணையை, சம்பந்தப்பட்ட துறையினர் ஏற்கனவே தொடங்கி விட்டனர். ஐ.பி.எல். நடவடிக்கைகள் பற்றிய முழு தகவல்களும் பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல்.லில் முதலீடு செய்யப்பட்ட பணம், அந்த பணம் வந்த வழிகள் என அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. விரிவான விசாரணைக்கு பிறகு, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவொரு குற்றவாளியோ அல்லது தவறு செய்தவர்களோ தப்ப முடியாது.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment