ஆசிரமத்தை கைப்பற்ற முடிவு
பெங்களூர் : கர்நாடக சி.ஐ.டி. போலீசின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நித்யானந்தா திணறி வருகிறார். அவர் அந்நிய செலாவணி மோசடியிலும் ஈடுபட்டு இருப்பதாக சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். பாலியல் முறைகேடு, நிதி மோசடி உள்ளிட்ட புகார்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, பெங்களூர் அரண்மனை சாலையில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணையும் வீடியோ எடுக்கப்படுகிறது. முதல் 2 நாட்கள் நடைபெற்ற விசாரணையின்போது போலீசாருக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. வழக்கு சம்பந்தப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதித்தார். இதனால், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ) நடத்த சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். அவருடைய போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது இதற்கு அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டனர். ஆனால், போலீசார் எதிர்பாராத வகையில், நேற்று நடைபெற்ற 3ம் நாள் விசாரணையில் அவர் ஓரளவு ஒத்துழைப்பு அளித்தார். எனவே, அவருக்கு ‘நார்கோ’ சோதனை தேவையில்லை என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். சீடர்கள் கூறியுள்ள புகார்கள் பற்றி நித்யானந்தாவிடம் போலீசார் நேற்று கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் திணறியதாக சி.ஐ.டி. வட்டாரங்கள் கூறின. பெங்களூரை சேர்ந்த ரியஸ் எஸ்டேட் அதிபர் நாகராஜ் என்பவரிடம் இருந்துதான் பிடதி நிலத்தை அன்பளிப்பாக பெற்று நித்யானந்தா ஆசிரமம் நிறுவினார். அந்த நிலத்தை தனது பெயரிலேயே பதிவு செய்து கொண்டார். அதில், அரசு அனுமதியின்றி நீச்சல் குளம், சொகுசு அறைகள் கட்டியுள்ளார். இப்போது இந்த நிலத்தை நாகராஜ் குடும்பத்தினர் திரும்பப் பெற முயன்று வருகின்றனர். நித்யானந்தாவை பிடதி ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று இந்த நிலம் தொடர்பாக விசாரணை நடத்த சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் 22 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பிடதி ஆசிரமத்தை கைப்பற்ற கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் ஆடை, கிரானைட் ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். நித்யானந்தாவுக்கு வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் அவ்வப்போது பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுத்து வந்துள்ளனர். அந்த பணத்தை இந்த நிறுவனங்கள் மூலமாக இந்தியா கொண்டு வந்து அந்நியச் செலவாணி மோசடியிலும் அவர் ஈடுபட்டு இருப்பதை சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அது பற்றி புகார்கள் எதுவும் வரவில்லை என்றாலும், போலீசார் அதை தாமாகவே விசாரிக்க முடிவு செயதுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுத உள்ளனர். தமிழ்நாடு, கேரளா போலீஸ்:நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமங்கள் தமிழ்நாடு, கேரளாவில் இருக்கின்றன. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த இந்த இரு மாநில போலீசாரும் பெங்களூர் வந்துள்ளனர். நித்யானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றத்தின் அனுமதி பெற இன்று மனு செய்ய உள்ளனர்.
0 comments:
Post a Comment